நீடிக்கும் அவலம்... இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதுடன் மழை தொடரும் எனவும் அறிவிப்பு.


நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற்போயிருப்பதாக
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதேவேளை இக்காலநிலை எதிர்வரும் வாரமும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாடு முழுவதும் பிற்பகல் வேளைகளில் அடை மழை பெய்யும் அதேநேரம் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. சபரகமுவ, மேல், மத்திய, வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் ஏனைய இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்சியும் பெய்யுமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் குளிர் காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று கடற்பரப்பிற்கு மேலும் முகில் கூட்டம் அதிகமாக உள்ளதால் கொழும்பு மற்றும் மன்னாருக்கூடாக காலியிலிருந்து காங்கேசந்துறை வரை கடலில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடலில் கடும் காற்று வீசுவதுடன் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா, கேகாலை,இரத்தினபுரி, காலி, களுத்துதுறை,குருணாகலை, புத்தளம், மொனராகலை,கம்பஹா, பொலனறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்கி 07 பேரும் நீரில் மூழ்கி 06 பேரும் மண்சரிவில் புதைந்து இருவரும் மரம் முறிந்து விழுந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 20 மாவட்டங்களதும் இயல்புநிலை தொடர்ந்தும் வழமைக்குத் திரும்பவில்லை. இம்மாவட்டங்களைச் சேர்ந்த 35,129 குடும்பங்களைச் சேர்ந்த 1,38,292 மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 13,199 குடும்பங்களைச் சேர்ந்த 53,616 மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் தப்போவ நீர்த்தேக்கம் நிறைந்ததால் அதன் அனைத்து வான் கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. இதனால் தப்போவ 01 கிராமம் முற்றாக நீருக்குள் மூழ்கியது. அங்கிருந்த 46 குடும்பங்களை பாதுகாப்பாக மீட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

 கம்பஹா மாவட்டத்தில் மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்தது. இதனால் ஜா எல மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் நேற்றும்  வெள்ளத்தில் மூழ்கின. களனி கங்கையின் நீர் மட்டம் குறைந்த போதும்  சிறு வெள்ள அளவில் அதன் நிலமை நீடித்தது.

இந் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக  35129குடும்பங்களைச் சேர்ந்த 138292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் (ஊடகம்) பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்

இவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாரும் முப்படையினரும் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தென் மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாட்டில் நிலவும் கடும்  மழையுடன் கூடிய காலநிலையினால் 20 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் அம்மாவட்ட மக்களின்  இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சீரற்ற கால நிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை  நேற்று  18 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளிட்ட மூவர்  காணாமல் போயுள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

லக்ஷ்மி பரசுராமன் 
நீடிக்கும் அவலம்... இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதுடன் மழை தொடரும் எனவும் அறிவிப்பு. நீடிக்கும் அவலம்... இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதுடன் மழை தொடரும் எனவும் அறிவிப்பு. Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.