கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தற்போதைய அரசாங்கம் ஏதேனும் செய்திருக்கின்றதா என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது மரண பயம் இல்லை. எவரும் அச்சப்படாமல் தமது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் நாட்டில் உள்ளது.
எவருக்கும் மரண அச்சமில்லை. ஜனாதிபதி, பிரதமர் முதல் எவரையும் விமர்சிக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
கருத்துக்களை வெளியிடுவதால் எவரும் காணாமல் போவதில்லை. வெள்ளை வான் கலாசாரம் இல்லை. இப்படியான சம்பவங்கள் நான் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்திலேயே நடந்தன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிந்தே இந்த சம்பவங்கள் நடந்தன. இவற்றுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்புக் கூறவேண்டும்.
கோத்தபாயவின் இந்த நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் தற்போது சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுகிறது.
இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தில் நடந்திருந்தால் அது மறைக்கப்பட்டிருக்கும்.
இந்த சம்பவத்துடன் மேலும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. அவர்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.