அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விஜிதபுர எனும் இடம் எல்லாளன்-துட்டகைமுனு இருவருக்குமிடையே போர் நடைபெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் அப்பிரதேசத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றை துப்புரவு செய்து வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அங்கிருந்த புராதன சின்னங்கள் பலவும் சேதமடைந்திருந்தன.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மாலை கலகொட அத்தே ஞானசார தேரர் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்து, தொல் பொருள் சேதங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு அமைச்சர்களை விடவும் கூடுதலான அளவில் பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தாக கொழும்பு நியூஸ்டுடே செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கடந்த சில நாட்களாக ஞானசார தேரரின் நிகழ்வுகளில் எடுக்கப்படும் புகைப்படங்களில் அவருக்குப் பின்னால் மெய்ப்பாதுகாவலர்கள் நிற்கும் காட்சிகளை அவதானிக்க முடிவதாகவும் குறித்த செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மெய்ப்பாதுகாவலர்கள் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் புகைப்படங்களில் காணக்கிடைத்துள்ளது.
-அஸீம் கிலாதீன் -
பலத்த பாதுகாப்புடன் அனுராதபுரம் விஜிதபுர விஜயம் செய்த ஞானசார தேரர்
Reviewed by Madawala News
on
May 09, 2018
Rating: