(எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னுக்கு செல்லாவிட்டால் மீண்டும் ராஜபக்ஷ
காலத்தில் இடம்பெற்ற அராஜக ஆட்சியே தலைதூக்கும். அத்துடன் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தூய்மை தொடர்பாக கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு அருகதையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் கடந்த 3 வருடங்களாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதிகமான விடயங்களை மேற்கொள்ள தவறியுள்ளது. ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதாக தெரிவித்து அதிகாரத்துக்கு வந்த, இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களே ஊழல் மோசடிகளில் தொடர்புபட்டு மாட்டிக்கொண்டுள்ளனர். அதனால் அரசாங்கம் எஞ்சியிருக்கும் காலப்பகுதியிலாவது தவறுகளை திருத்திக்கொண்டு மக்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் தற்போது நாட்டுக்குள் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. கூட்டு எதிரணி இதனால் 3 பிரிவுகளாக பிளவு பட்டிருக்கின்றது.
அதில் ஒரு பிரிவினர் கோத்தபாய ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர். இன்னும் சிலர் பஷில் ராஜபக் ஷவே ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவிக்கின்றனர். அதேபோன்று சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தேசிய அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் இந்த விடயத்தில் முரண்பட்ட கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி செல்லும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதாகவே தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு பதிலாக ராஜபக் ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். அதனால் அரசாங்கம் இதுவரை செய்துவந்த தவறுகளை திருத்திக்கொண்டு மக்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் ராஜபக் ஷவினரின் அராஜக ஆட்சியே தலைதூக்கும் அபாயம் ஏற்படும்.
கோத்தபாய ராஜபக் ஷ, அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் தூய்மையாக வேண்டும் என்றும் அரசியலில் ராஜபக் ஷ குடும்பம் சிறந்த முன்மாதிரி என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜபக் ஷவினரின் கடந்த கால அரசியல் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அரச அதிகாரியாக இருந்த கோத்தபாய ராஜபக் ஷ கொழும்பு மாநகரசபை அதிகார பிரதேசத்தில் என்னசெய்தார் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கதைப்பதற்கு கோத்தபாயவுக்கு எந்த அருகதையும் இல்லை .
Reviewed by Madawala News
on
May 16, 2018
Rating: