மாளிகாவத்தை குழந்தை உஸ்மான் ஹிக்கம் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் விசாரணையில் "தாயார்" கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.
(எம்.எப்.எம்.பஸீர்)
மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தை, தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு வயது குழந்தை
கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வளர்ப்பு தாய், தந்தை இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீ ராலக நேற்று உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட இருவரையுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் எனும் 2 வயது பாலகன் மர்மமாக உயிரிழந்திருந்த நிலையில் குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
கடந்த 14 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் மர்மமாக உயிரிழந்த குழந்தை ஒன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை எதுவும் செய்யாது அடக்கம் செய்ய அவரது பெற்றோர் தயாராவதாக பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி அழைப்பு இலக்கம் ஊடாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அது தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த தொடர்மாடி வீட்டுக்கு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பொலிஸார் அவ்வீட்டுக்கு சென்றபோது மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் எனும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளமையை தெரிந்துகொண்டனர்.
இது தொடர்பில் அங்கு பெற்றோர் என முன்னிலையான இருவரிடமும் பொலிஸார் செய்த விசாரணைகளில் குழந்தைக்கு சீனி அதிகரித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குழந்தையின் சடலத்தை பரிசோதித்தபோது, இடது காலில் தீக்காயம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனால் பொலிஸாருக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்படவே, கொழும்பு மேலதிக நீதிவானுக்கு (புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிவான்) அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதன்போது குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு குழந்தையின் ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் அதனை பிரதான சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா முன்னெடுத்தார். இதன்போது குழந்தை மிகக்கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
' சடலத்தில் பல்வேறு காயங்கள் காணப்படுகின்றன. எனினும் அக்காயங்கள் திடீர் விபத்தொன்றினால் ஏற்பட்டதல்ல. வன்முறை அல்லது சித்திரவதையால் உண்டான காயங்களே உள்ளன. இந்த மரணமானது இவ்வாறான பல காயங்களால் ஏற்பட்டது.' என சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்தே சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் அக்குழந்தையினை வளர்ப்பு தந்தையும், தாயும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த குழந்தை 5 மாத குழந்தையாக இருந்தபோது கடிதம் ஒன்றின் ஊடாக தத்தெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கேசரிக்கு தெரிவித்ததாவது,
' விசாரணைகளின்படி, கைதான 26 வயதான குழந்தையை வளர்த்த தாய், ஏற்கனவே இரு திருமணங்கள் செய்தவர். இது அவரது மூன்றாவது திருமணம்.
2 ஆம் திருமணத்தில் அவருக்கு 10 வயது பெண் பிள்ளை ஒன்றும்
தற்போதைய விவாகத்தில் 6 வயது பெண் பிள்ளையொன்றும் உள்ளனர்.
இந்த ஜோடி, சிறிது காலத்துக்கு முன் தொட்டலங்க பகுதியில் வசித்துள்ளது. அப்போது, அவர்களது அயல் வீட்டில் தமிழ் குடும்பம் ஒன்றும் வசித்துள்ளது.
அந்த தமிழ் தம்பதிக்கு பிறந்த குழந்தையே கொல்லப்பட்ட குழந்தை. சந்தேக நபரான பெண் வழங்கியுள்ள வாக்கு மூலத்தின் படி, குறித்த குழந்தை 5 மாத குழந்தையாக இருந்தபோது, அந்த தமிழ் தம்பதியர் தாம் வெளிநாடு செல்லப்போவதாகவும் வரும் வரை குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியுமா எனவும் இவர்களிடம் கேட்டுள்ளனர்.
பின்னர் முழுமையாகவே வளர்க்கக் கொடுத்துள்ளனர். கடிதம் ஒன்றினை எழுதி இந்த வளர்ப்புக் கைமாறல் இடம்பெற்றுள்ளது. எந்தவொரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ப்பு உரிமம் தொடர்பிலான நியமங்களும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. பொறுப்பேற்ற தம்பதியே பிள்ளைக்கு மொஹம்மட் அலீ மொஹம்மட் உஸ்மான் ஹிக்கம் என பெயர் வைத்துள்ளனர். எந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் அவர்களிடம் இல்லை.
இந்த நிலையில் குழந்தையை தாக்குவதற்கான காரணம் தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்தோம்.
அதன்போது அந்த வளர்ப்புத்தாய் கூறிய விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தனது சொந்த மகள்மார் இருவரை விடவும் தனது கணவர் குழந்தை மீது இரக்கமாக நடந்துகொண்டதாகவும் அதனால்தான் தொடர்ச்சியாக குழந்தையை சித்திரவதை செய்ததாகவும் கைதான பெண்வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந் நிலை யில் நாம் இது குறித்து தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என்றார்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குழந்தை யின் உண்மை பெற்றோரை பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பிலும் விசாரணை ஒன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித் தனர்.
மாளிகாவத்தை குழந்தை உஸ்மான் ஹிக்கம் உயிரிழந்த விவகாரம்.. போலீஸ் விசாரணையில் "தாயார்" கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.
Reviewed by Madawala News
on
May 17, 2018
Rating: