திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லுரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென ஹபாயா அணிந்து வந்ததன் பின்னர் அங்கு தோன்றியுள்ள குழப்பகரமான நிலைமைகள் கவலையளிப்பதாக உள்ளது. இது திட்டமிட்ட மதவாத செயற்பாடுகள் என்பதோடு, பாடசாலை அதிபரை அச்சுறுத்தியுள்ளதையும் வன்மையாகக் கண்டிப்பதாக இந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (புதன்கிழமை) ஹிந்து சம்மேளத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் பாடசாலைகளில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் பண்பாடு, கலாசாரம் மற்றும் இன விகிதாசாரம் என்பவற்றிற்கு ஏற்பவே ஆசிரியர்களும் மாணவர்களை ஒழுக்கமிக்கவர்களாக வழிநடத்திவருகின்றனர்.
எனினும் சவூதி அரேபியாவில் முஸ்லிம் பெண்கள் ஆடையணிவது போன்று திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரியிலும் அணியவேண்டும் என்பது கடும் கண்டனத்திற்குறியது.
இதன் பின்னனியில் ஒரு அரசியல் வாதி உள்ளார் என்பதும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பொன்று செயற்படுவதாகவும் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரிக்கவேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இது பரிணமிக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்திற்கும் அப்பால் மத அடிப்படைவாதிகள் சிலர் பாடசாலையினுள் அத்துமீறி பிரவேசித்ததோடு அதிபரையும் அச்சுறுதியுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.