கண்டியில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டால்,
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்ந்த பின்னரே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அவர் கூறினார்.
கண்டியின் முக்கிய பகுதிகளில் நிலவிய அசாதாரணமான சூழ்நிலை காரணமாக, மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் 10 திகதி மாலை வரை, பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கண்டியில் காணப்பட்ட அசாதாரண சூழல், சாதாரண நிலையை அடைந்து விட்டாகவும் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும், தொடர்ந்தும் கண்டியின் சில பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருப்பர் என்றும், பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மார்ச் 4ஆம் திகதி வரை, 146 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவத்தால், 465 வீடுகளும் கடைகள், வாகனங்கள் உள்ளிட்ட பல சொத்துகள், இதன்போது கடுமையக சேதமடைந்திருந்தன.
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற இந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு, மூவரடங்கிய குழுவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில், வன்முறையில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, பொலிஸ் தலைமையகக் காரியாலயத்தில், சிறப்பு நடவடிக்கை மையமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி தணிந்தது... ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிலைமை இல்லை : பொலிஸ்.
Reviewed by Madawala News
on
March 12, 2018
Rating: