கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் பற்றி கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கலந்துரையாடல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்றது.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அனுநாயக்கர்களும், இஸ்லாமிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மௌலவிமாரும், ஏனைய மதங்களின் தலைவர்களும், அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள்.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மக்கள் மத்தியிலான தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து அமைதியை நிலைநாட்டுவதில் சர்வமதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு பற்றி பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
வன்முறைகளைத் தூண்டுவோருக்கு எதிராக எதுவித தராதரமும் பார்க்காமல் தண்டனை வழங்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.
சிறியதொரு சம்பவம் ஊடக வலைப்பின்னல் வாயிலாக அனாவசியமான முறையில் மிகைப்படுத்தி விபரிக்கப்பட்டதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக சர்வமதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில், உண்மையான நிலவரத்தை சர்வமதத் தலைவர்கள் ஊடாக மக்கள் மத்தியில் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சகல இன குழுமங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது அவசியம். எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கு சமயத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சரியான பின்புலத்தை கட்டியெழுப்ப வேண்டும். உரிய பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்த பொலிசாரும் படையினரும் உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கண்டியில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
Reviewed by Madawala News
on
March 08, 2018
Rating: