-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து பாரிய வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்
துறையை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா தெரிவித்தார். (17.3.2018 மாலை)
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் இடம் பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டி சுற்றுலா ஹோட்டல் சங்கம் மற்றும் சுற்றுலாத் துறை பணிப்பாளர்கள் உற்பட சுற்றுலா விடுதிகளுடன் தொடர்புடைய நிறுவனத் தலைவர்களால் நடத்தப்பட்ட இச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்பாராத அளவு சுற்றுலாத் துறை திடீர் வீழ்ச்சியைக் காண்பித்துள்ளதாகவும் ஆனால் நிலைமைகள் சீராகி உள்ளதால் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாத்துறையினர் கண்டிக்கு பயமின்றி வருகை தரமுடியும் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக சுற்றுலாத்துறைக்கு பலத்த அடி விழுந்துள்ளதாகவும், இதிலிருந்து மீளாவிட்டால் சுற்றுலாத் துறையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு பட்டுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் பாதிப்படைய வேண்டிவரும் என்றும் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாத் துறை நிர்வாகிகள் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறையினர் பாரியளவு வருகை தந்ததாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கை காரணமாக பதிவு செய்யப்பட்ட பல அறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இது பாரிய தொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஹோட்டல் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையிலே சில முன் மொழிவுகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகிய வற்றுடன் பேசி நிலைமையை சீராக்குவதுடன் ஊடகங்களும் கண்டி நிலைமை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர சரத் ஏக்கநாயக்கா மேலும் கேட்டுக் கொண்டார்.
கண்டியில் விழுந்த அடி, சுற்றுலாத்துறைக்கு விழுந்த பாரிய அடி. எதிர்பாராத அளவு திடீர் வீழ்ச்சி.
Reviewed by Madawala News
on
March 18, 2018
Rating: