இஸ்ரேலுக்கான விசுவாசத்தை மீறும் ஜெரூசலத்தில் வசிக்கின்ற பலஸ்தீன குடியிருப்பாளர்களின்
வதிவிட உரிமையை அகற்றுவதற்கு இஸ்ரேலிய உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலத்தில், தவறான தகவல்கள் அடிப்படையில் வதிட உரிமை பெறுவது மற்றும் தனிநபரின் குற்றச்செயல்கள் குறித்தும் உள்துறை அமைச்சு அவதானம் செலுத்தும்.
இந்த புதிய சட்டத்தின்படி தீவிர ஓர்தடொக்ஸ் அரசியல் கட்சியின் தலைவரான இஸ்ரேலிய உள்துறை அமைச்சர் ஆர்யேஹ் டெரியுக்கு, தான் அச்சுறுத்தலாக கருதும் எந்த ஒரு பலஸ்தீனரின் வதிவிட உரிமையையும் அகற்றுவதற்கு அதிகாரம் கிடைக்கிறது.
“இது ஒரு தீவிர இனவாத சட்டம்” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரான ஹனான் அஷ்ராவி வர்ணித்துள்ளார்.
“ஜெரூசலத்தை சேர்ந்த பலஸ்தீனர்களின் வதிவிட உரிமையை அகற்றுவது அநீதியானது. பலஸ்தீனர்கள் தமது சொந்த நகரில் வசிக்கும் உரிமை மறுக்கப்படுவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்பதோடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறுவதாகும்” என்று அஷ்ராவி சாடினார்.
இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெரூசலத்தை தனது பிரிக்கப்படாத தலைநகரின் அங்கம் என்று இஸ்ரேல் கோருகிறது. இங்கு பிறந்து வாழும் பலஸ்தீனர்கள் அங்கிருக்கும் யூதர்கள் போலன்று இஸ்ரேலிய பிரஜா உரிமை பெற்றவர்களல்ல.
ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் வசிக்கும் 420,000 பலஸ்தீனர்கள் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் போல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய சட்டம் அவர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
ஜெரூசலத்தை சேர்ந்த ஒரு பலஸ்தீனர் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நகரில் இருந்து வெளியில் வசித்தால் கூட அவர்களின் வதிவிட உரிமை மறுக்கப்படும் நிலைமை உள்ளது.1967இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது தொடக்கம் இவ்வாறு குறைந்தது 14,000 பலஸ்தீனர்கள் தமது வதிவிட உரிமையை இழந்துள்ளனர்.
இந்த சட்டம் இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமக்கு உதவுவதாக உள்துறை அமைச்சர் டெரி, ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரூசலம் பலஸ்தீனர்களின் வதிவிட உரிமையை நீக்க இஸ்ரேலில் சட்டம்.
Reviewed by Madawala News
on
March 12, 2018
Rating: