16 வயது இளைஞர். அண்ணனின் மோட்டார் சைக்கிளை எடுத்து ஓடும் போது, அது மின்கம்பத்திலே
மோதி, முழங்காலுக்கு மேலே உடைந்து விட, ஹொஸ்பிடலுக்கு கொண்டுவரப்பட்டார்.
எலும்பு உடைந்து, இரத்த நாடியை கிழித்துக்கொண்டு போயிருந்தது. அவசரமாக அந்த இரத்த நாடி சீரமைக்கப்பட்டது. அடுத்த நாள் பார்க்கும் போது சீரமைக்கப்பட்ட நாடி இயங்க மறுத்தது.
ஆனால் கால் விரலிலே ஒக்சிஜனின் அளவு சீராக இருக்க, அவர் இளம் வயது என்பதால், இரத்த ஓட்டம் சரியாகும் என எதிர்பார்த்திருக்கையில், மூன்றாவது நாளில் சீரமைக்கப்பட்ட நாடியில் கிருமித்தொற்று காணப்பட்டது.
அதனை அகற்ற சத்திர சிகிச்சை செய்து, சீரமைக்கப்பட்ட நாடி அகற்றப்பட்டது. பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவரது கிருமித் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒன்றரை மாத போராட்டத்திற்குப்பின் அவரது காலை முழங்காலுக்கு மேல் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. தமிழ் தெரிந்த காரணத்தினால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் அனைத்தையும் விளங்கப்படுத்தி, அவரது ஒப்புதலை பெற வேண்டிய பொறுப்பு எனக்கேற்பட்டது.
ஒன்றரை மாத போராட்டத்தில் அந்த இளைஞர் மிகவும் இயலாமலிருந்தார்.
நேற்றிரவு அவரது காலை எடுத்து விட்டு வந்ததிலிருந்து தூக்கம் வரவில்லை.
அன்பான இளைஞர்களே, மோட்டார் சைக்கிளை கவனமாக பாவியுங்கள்.
- Dr. அஹ்மத் நிஹாஜ் :
Orthopaedic Register @ NHSL, Colombo
தூக்கமற்ற இரவு !
Reviewed by Euro Fashions
on
March 14, 2018
Rating: