இந்த ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும், 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் நாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)
முன்னைய ஆட்சியின் போது வருமானம் இல்லாமையின் காரணமாக வெளிநாடுகளில் கடன் பெற்றனர்.
இந்த கடனை தற்போது நாமே செலுத்த வேண்டியுள்ளது. அதிகளவிலான கடன் அடுத்த வருடமே செலுத்தப்பட வேண்டும். இதன்பிரகாரம் நடப்பாண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும் 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டில் 3.7 ட்ரில்லியன் ரூபாவும் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.
அத்துடன் மக்களுக்கு சுமையான பொருளாதாரத்தை பொறுப்பேற்று 18 மாதங்களில் ஸ்திரமான பொருளாதாரத்தை ஏற்படுத்தியுள்ளோம். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீவிர பொறுப்பு முகாமை சட்டமூல இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
முன்னைய ஆட்சியிடம் இருந்து, மோசமான பொருளாதாரத்தை நாம் பெற்றுக்கொண்டோம். எனினும் சுமார் 18 மாதங்களில் நாட்டை நாம் பொறுப்பேற்று ஸ்திரமான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். முன்னைய ஆட்சியின் சீரற்ற பொருளாதாரம் காரணமாக திறைசேரி சரிவினை சந்தித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
தற்போது நாம் வருமானத்தை அதிகரித்துக்கொண்டுள்ளோம். நேரடி வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் ஏன் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். ஏனெனில் முன்னைய ஆட்சியின் போது பெறப்பட்ட எல்லை மீறிய கடனை நாம் செலுத்த வேண்டியுள்ளது. முன்னைய ஆட்சியின் போது வீணான அபிவிருத்தி திட்டங்களுக்காக கடன் பெறப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையம் மற்றும் மாகந்துற துறைமுகம் தற்போது வெள்ளை யானையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி 11 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.
நடப்பாண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும் 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் 2020 ஆம் ஆண்டில் 3.7 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் இலங்கை செலுத்த வேண்டிய அதிகளவிலான கடன் தொகை முன்னைய ஆட்சியின் போது பெறப்பட்டதாகும். எனினும் தற்போது மொத்த தேசிய உற்பத்தி ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துள்ளோம். மேலும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அதிகரிக்கச் செய்துள்ளோம் என்றார்.
இந்த ஆண்டில் 1.9 ட்ரில்லியன் ரூபாவும், 2019 இல் 4.2 ட்ரில்லியன் ரூபாவும் நாம் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
Reviewed by Madawala News
on
March 24, 2018
Rating: